Chitirrai Thiruvizha - அழகரின் "குதிரை' ரகசியம்


அழகரின் "குதிரை' ரகசியம்: பாவ விமோசனம் தரும் சித்ரா பவுர்ணமி நன்னாளான இன்று, காலை கள்ளழகர் குதிரையில் வந்து வைகையாற்றில் இறங்கினார். குதிரையை போர்வீரர்களே அதிகம் பயன்படுத்துவார்கள். அழகரும் ஒரு போர் வீரரே! ஆம்..மானிடர்களாகிய நாம் பலவித கெட்ட குணங்களுடனும், "நான்' என்ற ஆணவ குணத்துடனும் வாழ்கிறோம். அதனால், பல பாவங்களைச் செய்கிறோம்.

நமக்குள் உறைந்து கிடக்கும் இந்த கெட்ட குணங்களுடன் போரிட்டு, பாவச்சுமையைக் குறைக்கவே அவர் குதிரை மீதேறி வந்திருக்கிறார். அவரது குதிரையின் நான்கு கால்களும் தர்மப்படி வாழ வேண்டும், வாழ்க்கையின் பொருள் உணர்ந்து வாழ வேண்டும், அதன் மூலம் இன்பம் பெற வேண்டும், பாவமற்ற வாழ்க்கை பிறப்பற்ற நிலையை நல்கும் என்ற நான்கு நிலைகளாக (அறம், பொருள், இன்பம், வீடுபேறு) உள்ளன. குதிரையின் ஒரு காது எதைக் கேட்கலாம் என்பதையும், மற்றொரு காது அதன் விளைவுகளையும் (பாவ, புண்ணியம்) குறிக்கிறது. அதன் கண்கள் எதைக் காண வேண்டும் என்பதையும், அதனால் கிடைக்கப் போகும் கண்ணுக்குத் தெரியாத பலன்களையும் தெரிவிக்கின்றன.
குதிரையின் முகம் நம் தலைவிதியைக் குறிக்கிறது. அதன் வாலுக்கு அபார சக்தி உண்டு. உடலில் ஈ மொய்த்தால், குதிரை தனது வாலை ஆட்டி எப்படி அதை விரட்டுமோ, அதுபோல, விதிப்படி நமக்கு துன்பம் ஏற்பட வேண்டும் என இருந்தால், அந்த துன்பங்களை அழகரின் தரிசனம் விரட்டி விடும் என்பதை குதிரையின் ஆடும் வால் எடுத்துரைக்கிறது. கழுத்தில் கட்டப்பட்ட சலங்கைகளும், காலில் கட்டிய சிலம்புகளும் இறைவனை மந்திர ஒலி எழுப்பி வணங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. அழகர் குதிரையின் கடிவாளத்தை இறுகப் பிடித்திருக்கிறார். அதாவது, கட்டறுந்து ஓடும் மானிடப்பிறப்புகளின் செயல்பாடுகள் தன் கையில் உள்ளது என்பதை அவர் சொல்லாமல் சொல்கிறார். அவர் கையிலுள்ள சாட்டை, அவ்வாறு ஓடும் மானிடர்களுக்கு "சோதனை' என்னும் அடியைக் கொடுப்பதாக உள்ளது. குதிரையின் முதுகில் அவர் அமர்ந்துள்ளது, "அனைத்துலகும் தனக்குள் அடக்கம்' என்பதைக் காட்டுகிறது. அழகரை, இந்த ஆன்மிகக் கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்கள், அவர் உடுத்தியுள்ள பட்டு வஸ்திரம் போல், இவ்வுலகில் செல்வவளமும், மறு உலகில் தெய்வநிலையும் பெற்று உய்வடைவர்.

Source : http://www.dinamalar.com/
Related Posts Plugin for WordPress, Blogger...