கலைமகளே வருக! கல்வியைத்தருக!

வீணை இசைப்பது ஏன்?

கலைமகள் சரஸ்வதி ஆயகலைகள் அறுபத்துநான்கிற்கும் ஆதாரமாகத் திகழ்கிறாள். எல்லாக்கலைகளின் இருப்பிடம் என்று நாம் குறிப்பிட்டாலும், கண்ணுக்குப் பளிச்சென்று தெரிவது வீணைதான். சரஸ்வதியின் வீணை என்பது கலைகளின் குறியீடாகத் திகழ்கிறது. சரஸ்வதிதேவி வீணையை எப்போதும் இசைத்தபடி இருப்பது உலகில் கலைகள் நாளும் வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற உண்மையை நமக்கு உணர்த்துவதாக அமைந்துள்ளது. வீணையில் தந்திகள் மிகவும் இழுத்துக் கட்டப்பட்டிருந்தால், அவை அறுந்துவிடும். தொய்வாக இருந்தாலும் நல்ல இசை வெளிப்படாது. எது சரியான நிலையோ அந்தநிலையில் நரம்புகள் கட்டப்பட்டிருந்தால் மட்டுமே சுருதி சுத்தமாக வீணையில் நாதம் வெளிப்படும். நம் உடலும் வீணை போலத் தான். அதில் மனம், ஐம்புலன்கள் போன்ற அகக்கருவிகள் எல்லாம் தந்திகள். அந்த தந்திகள் சரியான நிலையில் கட்டப்பட்டிருக்க வேண்டும். அப்போது ஞானம் என்னும் இனிமையான ஸ்வரம் வெளிப்படும். இந்த சரஸ்வதிபூஜை நன்னாளில் "இவ்வுலக வாழ்வு பொய்யானது, இறைவனின் நிழலே என்றும் அடைக்கலம் தரும்' என்னும் மேலான உயர்ந்த ஞானத்தைப் பெற நம்மைத் தகுதிப்படுத்திக் கொள்வோம்.

காளமேகப்புலவருக்கு அருளிய கலைமகள்: திருமலைராயன் என்ற மன்னன், தமிழ்ப்புலவர்களைப் போற்றி வந்தான். இவனது அவையில் அதிமதுரம் என்பவன் அவைப்புலவனாக இருந்தான். இவனுக்கு கவி காளமேகத்தின் மீது பொறாமை உண்டாயிற்று. அவரைப் பற்றி மன்னனிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொன்னான். இதை நம்பிய மன்னன், காளமேகப்புலவர் அரசவைக்கு வந்தபோது, அவரை அவமதிக்கும் விதத்தில் ஆசனம் அளிக்கவில்லை. உடனே, காளமேகப்புலவர் சரஸ்வதியை தியானித்து ஒரு பாடல் பாடினார். அரசனின் சிம்மாசனத்திற்கு இணையான உயரிய ஆசனம் ஒன்று அவையில் தோன்றியது. அதில் ஒய்யாரமாக அமர்ந்தார் காளமேகம். கலைமகளின் அருள் பெற்ற காளமேகப்புலவரின் செயலைக் கண்டு, அஞ்சிய அதிமதுரமும், மன்னன் திருமலைராயனும் தங்கள் குற்றத்தை மன்னிக்குமாறு வேண்டினர். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை சரஸ்வதி, இந்த நிகழ்வின் மூலம் எடுத்துக் காட்டினாள்.

நீண்ட பாதத்துடன் சரஸ்வதி: திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் சரஸ்வதி ஞானம் அருள்பவளாய் தவக்கோலத்துடன் வெள்ளைத்தாமரையில் வீற்றிருக்கிறாள். அம்பிகையின் திருக்கரங்களில் ஜபமாலை, கமண்டலம், ஓலைச்சுவடி, கையில் காட்டும் சின்முத்திரையும் உள்ளன. இந்தப் பொருட்களும், முத்திரையும் ஞானசொரூபமாக மனிதன் மாற வேண்டும் என்பதைக் குறிக்கின்றன. உலகில் செல்வத்தால் பயனேதும் இல்லை. செல்வத்தை நல்வழியில் பயன்படுத்தக் கூட கல்வியறிவு வேண்டும் என்பதையும், கல்வியும், தியானமும் இறைவனை அடைய வைக்கும் பெரிய பாலம் என்பதையும் இவை உணர்த்துகின்றன. கந்தபுராணத்தில் சரஸ்வதிக்கு மூன்று கண்களும், ஜடாமகுடமும் (கூந்தலையே கிரீடம் போல் அலங்கரித்தல்) இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. சரஸ்வதி பூஜை தினத்தில், கூத்தனூர் சரஸ்வதிதேவியின் பாததரிசனத்தை அன்பர்கள் பெறும்வகையில் கருவறையிலிருக்கும் அம்பாளின் திருப்பாதங்களை அர்த்தமண்டபம் வரையில் நீட்டித்து அலங்கரிப்பது இக்கோயிலில் மரபாகப் பின்பற்றப்படுகிறது.

கலைமகளுக்கு பாம்பு வாகனம்: கலைமகளாகிய சரஸ்வதி வழிபாடு, ஜாவா, பாலி, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் உள்ளது. திபெத்தில் "யங்சன்ம' என்னும் பெயரிலும், ஜப்பானியர்கள் "பென்டென்' என்னும் பெயரிலும் சரஸ்வதியை வழிபடுகின்றனர். கலைதேவியாக இருக்கும் பென்டெனே காமதேவதையாகவும், தங்களது மனவிருப்பங்களை நிறைவேற்றுபளாகவும் பக்தர்கள் நம்புகிறார்கள். "டிராகன்' என்ற ராட்சஷ பாம்பு வாகனத்தில் பவனிவரும் இத்தேவி சிதார் போன்ற வாத்தியத்தை இசைப்பவளாகக் காட்சி தருகிறாள். ஜப்பானியர்கள் வழிபடும் ஏழுதெய்வங்களில் "பென்டென்' மட்டுமே பெண்தெய்வம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேஷியாவிலும், பாலித்தீவிலும் புத்தகங்களை அலங்கரித்துப் பூஜிக்கும் வழக்கம் இருக்கிறது. இப்பூஜைக்கு "கலஞ்சன்' என்றுபெயர். விஜயதசமி நாளில் பாலித்தீவில் "தம்பாக் ஸைரிங்' என்னும் குளத்தில் நீராடி புத்தகங்களை வழிபட்டால் கல்வியில் சிறந்துவிளங்கலாம் என்று மக்கள் நம்புகிறார்கள். தமிழகத்தில் முந்தைய சரஸ்வதி படங்கள் சிலவற்றில் மயில் வாகனமும், பாம்பும் வரையப்பட்டிருப்பதைக் காணலாம்.

மாணவி வடிவில் சரஸ்வதி: கல்வி தரும் சரஸ்வதியாக, தனம் தரும் லட்சுமியாக, வீரம் தரும் துர்க்கையாக இருப்பவள் சாரதாம்பாள். இவள் சகல கலைகளுக்கும் அதிபதியாகத் திகழ்கிறாள். சிருங்கேரியில் ஆதிசங்கரர் சாரதாம்பாளை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இங்கு தற்போதும் தேவி, ஒரு மாணவியைப் போல் படிக்கின்ற கோலத்தில் அமர்ந்திருக்கிறாள். கைகளில் சுவடி, ஜபமாலை, கெண்டி, ஞானமுத்திரை கொண்டு சர்வ ஆபரணங்களுடன் பத்மாசனத்தில் காட்சி தருகிறாள். இங்கு சாரதா நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.

சரஸ்வதி வழிபட்ட காளத்தி: காளஹஸ்தி மலை பஞ்சபூதத்தலங்களில் வாயு தலமாகத் திகழ்கிறது. சரஸ்வதிக்கு முனிவர் ஒருவரின் சாபத்தால் பேசும் சக்தி பறிபோனது. சாபநீக்கம் பெற அவள் காளஹஸ்தி வந்து, ஒரு தீர்த்தத்தை உருவாக்கினாள். அது சரஸ்வதி தீர்த்தம் எனபெயர் பெற்றது. அத்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, காளத்திநாதரைப் பூஜித்ததன் பயனாக சாபம் நீங்கப்பெற்றதாக தல வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது. இங்குள்ள அம்பிகை சரஸ்வதியின் பெயரால் "ஞானப்பூங்கோதை' என பெயர் பெற்றிருக்கிறாள். இங்குள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடுபவர்கள் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்கள் விலகிஞானம் பெறுவர் என்பது ஐதீகம்.

சரஸ்வதி ஸ்லோகம்

சரஸ்வதி நமஸ்துப்யம்வரதே காமரூபிணிவித்யாரம்பம் கரிஷ்யாமிஸித்திர் பவது மே ஸதா!

மாணவர்களுக்கான சரஸ்வதி ஸ்தோத்திரம்: மாணவர்கள் காலையில் பள்ளிக்கு கிளம்பும் போதோ, மாலையில் பாடம் படிக்க துவங்கும் முன்போ சொல்ல வேண்டிய எளிய சரஸ்வதி ஸ்தோத்திரம் இது. இதைக் கேட்கும் கலைவாணி சிறந்த கல்வியறிவைத் தருவாள்.

* தாமரை மலரில் வீற்றிருப்பவளே! தேவர்களால் போற்றப்படுபவளே! அழகிய புத்தகத்தை கரத்தில் கொண்டிருப்பவளே! பிரம்மனின் துணைவியே! கலைவாணியே! என் நாக்கில் மகிழ்ந்து ஆடுவாயாக!

* அடியவர்களின் இதய தாமரையில் ஒளிவீசி நிற்பவளே! மகிழ்ச்சியை தருபவளே! எதிர்த்து வாதிடுவோரை தோற்கடிக்கச் செய்பவளே! என்றும் நிலைபெற்றவளே! "நகுலி' என்னும் பெயர் கொண்ட அன்புத் தாயே! உன்னை வணங்கி மகிழ்கிறேன்.

* மாசு மருவற்ற சந்திரனின் நிறத்தைக் கொண்டவளே! மூன்று கண்களை உடையவளே! சந்திர கலையை தரித்தவளே! ஞான முத்திரையை உடைய கரத்தை கொண்டவளே! மந்திரங்களின் தலைவியே! என்னை பாதுகாப்பாயாக!

* ஜபமாலை, ஹோம கரண்டி, பாசம் ஆகியவற்றை கையில் உடையவளே! கொடி போன்ற உடலை கொண்டவளே! பொன் நிறத்தவளே! பாலசரஸ்வதியே! உன்னை மகிழ்ச்சியோடு வணங்குகிறேன்.

* மலர் முகத்தவளே! வெண்மை நிற ஆடையையும் வெள்ளை பூமாலையையும் அணிந்தவளே! அபய வரத கரங்களை கொண்டவளே! "பாரதி' என்னும் திருநாமம் கொண்டவளே! உன்னை வணங்குகிறேன்.

* அன்ன வாகனத்தில் அமர்ந்தவளே! திருநீற்றின் ஒளியால் பிரகாசிப்பவளே! புன்னகை சிந்துபவளே! வீணை, அமுத கலசம், சுடர் விளக்கு ஆகியவற்றை உடையவளே! கலைவாணியே! எங்களது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றித்தர வேண்டுகிறேன்.

* கூர்மையான அறிவுடையவளே! பல அணிகலன்களை பூண்டவளே! வாகீஸ்வரியே! உன்னை சரணடைகின்றேன்.

* அனைத்து உலகங்களையும் ஆள்பவளே! பேரழகு கொண்டவளே! சந்தேகத்தை நீக்குபவளே! கொஞ்சும் வீணையின் இசையை விரும்புபவளே! சக்கரம், சங்கு, பெண் கிளி ஆகியவற்றை கையில் ஏந்தியவளே! அரச போகம் தருபவளே! எனக்கு இந்த உலகின் தலைமைப் பதவியை அடையும் அருளைத் தருவாயாக!

புஷ்கர் சரஸ்வதி கோயில்:

இந்தியாவில், படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கும், கல்வி தெய்வமான சரஸ்வதிக்கும் கோயில்கள் குறிப்பிட்டுச்சொல்லும்படி இல்லை. பெரிய சிவாலயங்களில் உள்ள பிரகாரங்களில் சரஸ்வதிக்கு சன்னதி இருக்கும். பிரம்மா கோஷ்டத்தில் (கருவறை சுற்றுச்சுவர்) இருப்பார். தமிழகத்தில், திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் சரஸ்வதிக்கு கோயில் இருக்கிறது. வடஇந்தியாவில், ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் ஒரு கோயில் உள்ளது. 20 ஆயிரம் பேரே மக்கள் தொகையுடைய இவ்வூரிலுள்ள இந்தக் கோயிலுக்கு தினமும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் வரை வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

தல வரலாறு: "புஷ்கர்' என்றால் "பூவினால் பிறந்த ஊர்' என பொருள். இவ்வூரிலுள்ள பிரம்மாண்டமான ஏரியின் கரையை ஒட்டி பிரம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் புராதனச் சிறப்புடையது. ஆதிகாலத்தில் பிரம்மா பூலோகத்தில் யாகம் செய்வதற்கு ஏற்ற இடத்தைத் தேடி ஆகாயமார்க்கமாக . அன்னவாகனத்தில் ஏறிக்கொண்டு வலம் வந்தார். புஷ்கரத்தை நெருங்கி வந்த போது அவருடைய தாமரை மலர் நீண்டு வளைந்து பூமியைத் தொட்டது. அங்கே ஒரு ஏரி உருவானது. அதற்கு "புஷ்கர தீர்த்தம்' என்று பெயர் உண்டானது. இந்த இடமே யாகத்திற்கு தகுந்த இடம் என்பதை உணர்ந்தார் பிரம்மா. பத்மபுராணத்தில் பிரம்மா புஷ்கரத்தில் செய்த யாகம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

ஐப்பசி மாத பவுர்ணமிநாளை யாகத்திற்கு குறித்து, அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தார். யாகத்தில் கலந்து கொள்ள தேவர்களை அழைப்பதற்காக சரஸ்வதி கிளம்பினாள். கைலாயம், வைகுண்டம் சென்று பார்வதிதேவியையும், லட்சுமியையும் நேரில் சென்று அழைக்க ஆவல் கொண்டாள். இதனால், சரஸ்வதியால் யாகத்திற்கு திரும்பி வருவதில் தாமதம் ஏற்பட்டது. யாகத்தைத் தொடங்குவதற்குரிய முகூர்த்தநேரம் நெருங்கிவிட்டதால், பிரம்மா செய்வதறியாமல் தவித்தார்.வேதசாஸ்திரத்தின்படி மனைவி அருகில் இல்லாவிட்டால் யாகம் செய்ய முடியாது. அப்போது யாகம் நடத்திய அந்தணர்களின் வழிகாட்டுதலின்படி, காயத்ரிதேவியை மணந்து கொண்டார்.

சரஸ்வதி கோயில்:

தன்னை எதிர்பார்க்காமல் மறுவிவாகம் செய்த பிரம்மன் மீது சரஸ்வதிக்கு கோபம் ஏற்பட்டது. எனவே அவள், புஷ்கரத்தில் இருந்த குன்றின் மீது அமர்ந்து கொண்டு கோபத்தை வெளிப்படுத்தினாள். பூவுலகில் வேறுஎங்கும் பிரம்மனுக்கு கோயிலோ, ஆராதனையோ இனி நடக்காது என்ற சாபமும் கொடுத்தாள். இந்த குன்றின் மீது நூற்றுக்கணக்கான செங்குத்துப்படி களின் மீதேறினால், சரஸ்வதியின் கோயிலை அடையலாம். சரஸ்வதி கோயில் அமைந்திருக்கும் மலைக்கு ரத்தினகிரி என்று பெயர். அடிவாரத்தில் உள்ள கோயிலில் பிரம்மனும், காயத்ரியும் கோயில் கொண்டுள்ளனர். ராஜஸ்தானிய பாணியில் இங்கு அலங்காரம் செய்யப்படுகிறது.

பிரார்த்தனை: புஷ்கரத்தில் உள்ள பிரம்மா கோயிலில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற வெள்ளிநாணயங்களைத் தரையில் பதிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். அடியார்களின் பாதம் பட்டு அந்நாணயங்கள் தேய்ந்து போவதுபோல, துன்பங்கள் தீர்ந்துவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

புஷ்கர் மேளா: புஷ்கர் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசியில் மிகப்பிரம்மாண்டமான திருவிழா நடக்கிறது.இவ்விழா நவமியில் தொடங்கி பவுர்ணமியில் நிறைவு பெறும். அப்போது ஆயிரக்கணக்கில் மக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு வழிபாடு செய்கிறார்கள். மாநில அரசும் புஷ்கர் பெஸ்டிவல் என்ற பெயரில் அரசுவிழாவாக மேளாவை நடத்துகிறது. அப்போது ""டூரிஸ்டு வில்லேஜ்'' என்ற தற்காலிக கிராமத்தை உருவாக்கி சுற்றுலாப்பயணிகளை இங்கு தங்க வைக்கிறார்கள். அப்போது ராஜஸ்தான் மாநில பாரம்பரிய கலைகள் பொம்மலாட்டம், கோலாட்டம், நடனக்கலைநிகழ்ச்சிகள் பல நடத்தப்படுகின்றன.

சுற்றுக்கோயில்கள்: புஷ்கரைச் சுற்றியுள்ள பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இவற்றில் வராகர், பாதாளேஸ்வரர், தத்தாத்ரேயர், விஸ்வகர்மா, பராசர முனிவர், பாலமுகுந்தர், ராதாகிருஷ்ணர், ராமர், துர்க்கை கோயில்கள் சிறப்பானவை. தென்னிந்திய பாணியில் நிர்மாணிக் கப்பட்டிருக்கும் வைகுந்தர், ரங்கஜீ கோயில்களும் பார்க்கத் தகுந்தவை.

இருப்பிடம்: சென்னையில் இருந்து ஆஜ்மீர் சென்று, அங்கிருந்து 14 கி.மீ., ஜீப் அல்லது பஸ்களில் சென்றால் புஷ்கரை அடையலாம்.

Source : http://www.dinamalar.com/new/fpnnewsdetail.asp?News_id=5101

Related Posts Plugin for WordPress, Blogger...